Pin It

Widgets

இப்பொழுதெல்லாம்
என் அறையின்
மேற்கூறைகள் என்னிடம்
கோபித்துக் கொள்வதில்லை...

அறையில் வர்ணம்
நிரப்பும்
மெழுகுவர்த்தி ஏற்றப்படாமல்
மேசையில் விழுந்து கிடக்கிறது...

எனது வெறுமையின்
வாசனை வாங்கி
மூலைக்கு மூலை
ஒட்டடைகள் கடை
விரித்துக் கொண்டது...

என் கோலம் கண்டு
கடிகார முற்களும்
காலம் காட்டாமல்
நின்று விட்டது...

நான் விட்டம் பார்த்து
விழித்திருக்க
சுழலாத மின்விசிறியில்
தொக்கி நிற்கிறது
நான் எழுத நினைத்த
சிறுகதை ஒன்று...

தலைகீழ் கவிழ்ந்திருக்கும்
புத்தகத்தின் நடுவே
என் பேனா ஒன்று
வார்த்தைகளற்று தனித்திருக்க,

என் பாதத் தடங்கள்
தாங்கி நிற்கும் சுவற்றில்
நான் தேடும் ஏதோ ஒன்று
மறைந்து கொள்கிறது...

நான் பருகி வைத்த
தேனீர் கோப்பையின்
வட்ட வட்டப் படிமங்களும்,

நான் புகைத்து அணைத்த
சிகரெட்டின் கரைகளும்
என் தனிமையின்
அடையாளங்களாகிப் போக

என்னுடல் தாங்கி நிற்கும்
உயிர் காண தவமிருக்கிறேன்
ஒரு கானல் போல!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets