Pin It

Widgets

எனது சிந்தை இவற்றை தான்
அதிகம் விரும்புமென தீர்மானித்து
அலைபேசியில்

காதல் காமம் சோகம்
என பிரித்து
பாடல்களை பதிவு செய்திருந்தேன்

அந்த இரவு சோகம் தவிர்த்து
மிச்சம் இரண்டையும்
ஒரு சேர வேண்டுமென்றதால்,

அதிலொன்று இதிலொன்று
என எண்ண செவிகளை
சமாதானப் படுத்திப் பார்க்கிறேன்...

எதற்கும் அடைபடாது மீள்வதால்
சோகமென தீர்மானித்து
சோகப் பாடல்கள் கேட்கிறேன்

ஒரு வரையறைக்குள் சுழல விரும்பாத
மனது
இதைத் தாண்டி வேறெதுவோ
விரும்புவதாய் அனுமானித்து,

பண்பலையில் அலை வரிசை
அலைவரிசையாய் தேடுகிறேன்
அனைத்து வகைப் பாடல் இசைத்தும்
ஒரு முடிவிற்கு வந்தபாடில்லை...

இறுதியில்
தொடர்ச்சியாய் ஓடிக் கொண்டிருந்த
விளம்பரம் கேட்டு கண்ணயர்ந்து போகிறேன்
குரங்கு மனிதனடா நீயென்று!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets