நான் நிதானத்திற்கு வந்துவிட்டதாய் நீ சொல்லத் தொடங்கிய இரவில்மிகுந்த கும்மாளத்தோடு இருந்தோம்எக்காளமாய்மலைப் பிரதேசத்தில் நின்று சிரிப்பது போல எதிரொலி கேட்கிறதா என்று அறையில் கவனிக்க வைத்தாய். இருவரும் மேலும் கீழுமாய் உடலை மாற்றிக் கொண்டிருந்தோம்.

மேலிருந்து களைய முயன்று முடியாமல் தோற்றுகண்களைப் பார்த்ததையும்பின்னொரு இரவில் சாதித்து விட்டவன்போல காட்டிக்கொண்ட பாவனையில்பொறுமையை கற்றுக் கொண்டதில் உன் வேகம் கூடியது தெரிந்ததுதெரிந்ததும் கூடியது.

கீழிருந்து தொடங்குவதன் சூட்சமம் நீ சொல்லச் சொல்ல விரல்கள் மேலேறிக் கொண்டிருந்தது நெஞ்சாங்கூட்டில்.

மூங்கில் பச்சையினூடே அதன் கணு மிளிர்ந்தது நினைவுக்கு வருகிறது. நீ அன்று சொல்லிவிட்டநான் எழுத முடியாதொன்றுபின்னங்கழுத்தில் வீம்புக்காக சிலிர்க்கிறது. ஆனால் நான் சொல்வது அதுவல்ல.

இடையில் இறுக்கிக் கொண்டிருந்த ஆடையையை நான்கு விரல் அளவிற்கு மடித்துக்காட்டினேன். அடுத்தடுத்து நின்றிருந்த மெல்லிய தசைக் கோடுகளில் பட்டையாக கோடு கிழித்தாய். சுண்டு விரல் காற்றில் கூடவே வந்துகொண்டிருந்தது.

தலைமுடி கலைத்து விளையாடிக் கொண்டிருந்த விரல்கள் கற்றையாகப் பிடிக்கத்தொடங்கியது.

நிலவு தரிசிக்கட்டுமெனநிலவோடு தரிசிக்கவேண்டுமென அகல விரிந்தக் கண்களோடுமிதந்த நீண்ட கனவில் இடம் எதுவென தொலைந்து போயிருந்தது. டைரிதான் என்றாலும்எப்போதோ நீ குளிர் காயப்போவதற்கு எழுதி வைக்க வேண்டுமா என்ன?

கண்களைத் திறக்கவே விடவில்லை என்ற கர்வமும்திறக்க முடியவில்லை என்ற எள்ளலுமாய்தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருந்தாய். எது பகல் எது இரவென்ற குழப்பத்தின் நீட்சி பள்ளத்தாக்கில் புரள்வது போல வேகமாய் எழுகிறது.

உழுதபின் விழுந்த தூரலில்மண் மடிந்து கிடந்த கரிசல் தரை அது. என் கண்ணுக்குத் தட்டுப்படாதஎன் பாதத்தடம் மிதித்து துரத்தி வந்த நீ மயிலிறகு ஒன்றைக்காட்டி என்னை நிறுத்தினாய். உன் வாசனையில் எட்டாததா ஐஸ் க்யூப்சாக்லேட்மயிலிறகில் கிடைத்துவிடப் போகிறது என்றேன்.

இது திருப்திக்கு அல்ல ஆசைக்கு என்றாய்.

கனவு கலைந்தது போலத்தான் இருக்கிறது. இமைப் பீலிகை பிரிந்தபாடில்லை. ஆடையோடுதான் தூங்கியிருக்கிறேன் என்பதை, போர்வை உரசலில் உறுதி செய்துகொள்ளும் அவகாசம் வரைக்கும்தான் தூக்கம் கலைந்தது என்று நினைக்கிறேன். புரள்வது தெரிகிறது. ஒருவர் மட்டுமே தூங்கியெழும் கட்டிலில், உன்னைத் துழாவியிருக்கக் கூடும். தோளில் இருந்து கை வெட்டென தரை தொடாமல் விழுந்தது.

பிடிவாதமாய் இப்போது கனவை எனக்கு விருப்பமான இடத்திற்கு நகர்த்துகிறேன். இந்தக் கரிசல் நிலம் எல்லாம் நீ விதைத்தது.

அக்குள் மிகவும் சூடாக இருந்தது. இடப்பக்கத் தோளோடு காது மூடி ஒதுங்கிக் கிடக்கும் கூந்தலை முதுகிற்கு மாற்றினேன். மெத்தையோடு உடலும் அமிழ்வது ஏனோ, உன் முதுகில் என்னைக் கிடத்தியதாய் பிம்பம் எழுகிறது.

வலப் பக்கம்தான் வாகு என படுத்திருக்கிறாய். நான் கேட்டும் பிடிவாதமாய் மறுத்துவிட்டாய். பின்னங்கழுத்துக்குக் கீழே, தாடை வைத்து அழுத்துகிறேன். இப்போது நீ கேட்டு நான் அடம் பிடிக்கிறேன். உடலசைத்து உடலசைத்து இருவர் தலையையும் ஒன்றாக்குகிறாய்.

கம்மல் அழுந்தி வலிக்கிறதென உடல் வலு இழக்கிறேன். திரும்பிக் கொள்கிறாய். மூன்று நாள் தாடியென உன்னிடமிருந்து எழ முயன்றுத் தோற்கிறேன்.

பாதத்தில் ரேகைகள் தேடுகிறாய்அல்லது ரேகைகள் வரைகிறாய்வலது தோளில் கணுக்கால் அழுந்தியிருக்கிறதுஎடை சுமப்பது வலிக்குமென கால் வெட்டி இழுக்க முனைகையில் எடையின் வீரியம் குறித்து பேசத் தொடங்குகிறாய்பாதம் உன் கண்களில் படவில்லைஉனக்கு முன்பாக நீ நாற்காலி போட்டு நிறுத்தி வைத்த கண்ணாடியில் காண்கிறாய்.

மெகந்தி வரைவதற்கு உள்ளங்கையை விட உன் பாதம் சற்று வெண்மை கூடுதலாக இருப்பதாக கேலி செய்கிறாய்எப்படியென்ற புருவ அசைப்பில் தரையில் படுக்க வைத்து காலுயர்த்தி இருக்கையில் அமர்ந்து மெகந்தி வரைவது பற்றி சிலாகிக்கிறாய்.

நீ வார்த்தையில் கொஞ்சுவதைத் தாங்கிக்கொள்ளும் மனதுஅதுவே நீ செய்கைகளால் ஆளும் பொழுது உருகும் மெழுகு சில்லென மேனியில் விழுந்துபின் வெதுவெதுப்படைவது போலிருக்கிறது.

மேய்ச்சல் நிலத்தை வேடிக்கைப் பார்ப்பவன் போல உன் மூர்க்கத்தனத்தைவிழி மூடியும்நாசி துடித்தும்உதடு உலர்ந்தும்அடி நாவில் எச்சில் ஊறியும்ஒரு டால்பின் போல மேலெழும்பி அடங்குகிறேன்அடக்குகிறாய்.

கன்னத்தில் முத்தமிடாதே கூச்சமாக இருக்கிறது.


தணல் சாம்பலாகிப்போன விறகடுப்பில் 
துயிலும் பூனையென
குற்றச்சாட்டு ஒன்று தயாராக உள்ளது

முதல் முத்தம் இட்ட இடம்
இடது கண் இமைத் தசையென
கண்கள் விரிய சொல்லியாயிற்று

ஒரு தேநீர் கோப்பைக்கும்
இரு உதடுகளுக்குமான இடைவெளி
ஞாபகங்கள்

ஒய்யாரமாய் உடலுயர்த்தி
தொடையழுத்துகிறது காது மடல்களை

கடைசியாய் நீட்டித்துக் கொண்ட இரவு
யாருக்குச் சாதகமானதென
சமாதனப்படுத்திக் கொள்வதில் இல்லை

குற்றச்சாட்டு

உனக்கு முத்தமிடத் தெரிந்திருக்கிறது
விரிப்பு, போர்வையான பின்னிரவில்
கூர் மற்றும்
இருபக்க வெட்டுதிறன் குறித்து
பேசி முடித்தபின்
ஓர் உறையில் ஓர் கத்தி என்பதன்
சூட்சமம் சொல்லிக் கொடுத்தாய்

மேலும்
முனகல்களின் ஊடே
நிகழ்ந்த உச்சாடனத்தில் என் பெயர்

சந்தேகங்கள் கேள்வியாகதவரை
அல்லது
சந்தேகங்கள் கேள்வியாகும் போது

முத்தமிடத் தெரிந்திருக்க வேண்டும்

இருவருக்குமான மேஜையில்
பாதிப் பருகிய பழச்சாறின் நுரை
கோப்பையின் உள்ளே வடிகிறது
குறைந்த வெளிச்சத்திற்குப் 
பழகிய கண்களில் நீ
மங்கலாகத் தெரிகிறாய்
கண்ணாடியில் பார்த்துவிட்டு
பொருந்தவில்லையென
போனது போலவே வருகிறாய்
கேள்வியற்ற உதட்டிற்கு
தாளிடவில்லையென
விரல் கோர்த்தாய்
நியாயப்படுத்துதலின் நியாயங்களை
காலம்
எளிதில் அனுமதிப்பதில்லையென
சமாதானம் சொல்லிக் கொண்ட பின்
குரல் கேட்கப் பயமாய் இருக்கிறதென
அழைக்க மறுத்தாய் அதே பிடிவாதத்தோடு

இப்படியாக

Tuesday, December 08, 2015 | 0 comments »

உன்னிலிருந்த உன்னை 
கண்டெடுத்துக் கொடுத்தாய்
ஓர் சாமத்து உரையாடலில்

முன்னமே
தீர்மானிக்கப்பட்டது தான்

நினைத்துக் கொள்வதற்கும்
நினைத்துக் கொள்வதை
நினைவு படுத்துவதற்கும்
நித்தமும் ஒன்று
நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது

உனக்கான கூடு
இடம் மாறியிருக்கிறது
அல்லது தடம் மாறிவிட்டது

எதன் பொருட்டும்
விரல் நீட்டுவதாய் இல்லை
அததது அதனதன் போக்கில்
நதிக்குள் உருளும்
கூழாங்கல் போல

இன்னமும் என்னிடம்
சொல்வதற்கு சொற்கள்
இருந்து கொண்டுதானிருக்கிறது

உன் பற்களுக்குள்
அகப்பட்டு நின்ற என்
தசையின் இறுக்கம் போல
அடை காக்கிறேன்

14 கார்ட்ஸ்

Tuesday, December 08, 2015 | 0 comments »

இருவருக்குமான சீட்டாட்டத்தில்
ஜோக்கர் கவிழ்ந்திருக்கட்டும் என்றாய்
எண் வரிசை சேருவதற்காக 
இருவருமே மலர்த்தியாயிற்று
அவரவர் கையிலிருக்கும் மலர்களை

சாய்ந்து கொள்ளவேண்டுமென
இடம் மாறி
கையிலிருக்கும் கார்டுகளை
எண்ணிப்பார்க்கச் சொல்கிறாய்
பதினான்கு + பதினான்கு

நீ போதுமெனும் வரை
கட்டைக் கலைத்த திருப்தி

வேண்டுமென்றே
பதினான்கு கார்டுகள் போட்டிருப்பாய்
ஒப்பன் ஜோக்கரில்
விளையாடலாம் என்றாய்

சேரும் கார்டுகளுக்குத் தக்க
அடுக்கியபின் புருவம் விரித்து
“நோ ஜோக்கர்” என்றாய்

இருவருமே அவரவர் கையில்
இருக்கும் கார்டுகளை மாற்றிக் கொண்டோம்

நெஜமாகவே
விளையாடுற மூட்ல இருக்கியா என்றாய்

தரையழுந்திய பெருவிரலிலிருந்து
நழுவியது எதுவென அறியாது
வெயிட் கொடுக்காத என்றாய்

அந்தச் சிகப்பு நிறத்திற்கு உன்னிடம்
பிரத்யேகமாக ஒரு பெயர் இருந்தது
ரூபாய் நோட்டுகளை 
மடித்து வைக்கக் கூடாதென்றாய்
தொடுவுணர்வு நழுவும் வேளையில்
விழிப்புத் தட்டி பாதி உடலில்
பாதி உடலை கிடத்திக் கொண்டாய்
சமையல் மேடையில் முயங்கிச் சாய்ந்த பின்
கண்ணாடி வழியே தெரியாதென்றாய்
கீறல்களும் தழும்புகளும்
நினைவுகளாய் வேண்டுமென்றாய்
உச்சிப் பொழுதில் என்றைக்குமாய்
இன்றைய இரவு வேண்டும் என்றாய்
உலர்த்தப் படாமலே திரும்பிய ஆடையை
நீயும் வேண்டுமென்றாய்
விட்டுக் கொடுத்துவிட முடியுமா என்ன?

தவிப்பு

Monday, October 26, 2015 | 0 comments »

மேய்ச்சல் நிலத்தில்
இன்றைக்கான இரையை பருகியாயிற்று
ஆடுபுலி ஆட்டத்திற்கு
கட்டங்களை வரைந்திருக்கிறது காலம்
நீ நிலம்
நான் இரை
விளக்கின் வெளிச்சத்தில்
நிழல் நீள்கிறது
உடல் குறுக்கி உடல் நீட்டும்
ஒரு கம்பிளி போல
அவ்வளவு மெதுவாய்
அவ்வளவு மெதுவாய்
தவிப்பிற்கு எப்படி
தொந்தரவு என்று பெயரிடுவது?

காலை 4:37

Monday, September 28, 2015 | 0 comments »

பூனை தன் குட்டிகளை உண்பது பற்றி
விடியற்காலை 4:37–க்கு
அழைத்துக் கேட்கிறாய்

புணர்ச்சி வேகத்தில் கட்டிலிலிருந்து
புரண்டு விழுந்ததாய் கனவு

காதலை ஏற்றுக் கொண்டதும்
அடிநாவில் ஊற்றெடுத்த எச்சிலென
தேவை இருப்பதில்லை என்றேன்

“அந்த நிறம் தான் க்யூட்” என்று
வாங்கி வரச்சொன்ன
குறுஞ்செய்தியை நினைவு படுத்தி

கனவிலிருந்து தொடருகிறாய்...

வரிகள் மறந்துவிடாதிருக்க 
திரும்பத் திரும்ப 
சொல்லிக் கொண்டு வருகிறேன்
சைதாப்பேட்டை
கோடம்பாக்கம்
நுங்கம்பாக்கம் நோக்கி...

"இது யார்னு பாரு" என்கிறான்
என்ன கேள்வியோ? எதிர் குரலுக்கு 
"ரமேஷ் மாமா கூடத்தான் இருக்கு"
என்கிறாள்...

வர்ணத்தைப் பழக்கும் வித்தையை 
இருவரில் ஒருவர் மல்லாந்து,
அல்லது
இருவரில் ஒருவர் ஒருக்களித்துப்
படுக்கக் கூடிய கட்டிலில்
விழிகளுக்கு மிக நெருக்கமாய்
கொண்டு நிறுத்தித் தொடங்கினாய்...

தூக்கக் கலக்கத்தில்
உடல்களின் நடுவே ஒட்டிக் கொள்ளும்
இரத்த நிறப் போர்வை பிரித்து
இடைவெளி நிரப்பும் சூட்டிலிருந்து தான்
ஆவியாகிப் பொழியத் தொடங்கியது

கேள்வியினோடே சொல்லிக் கொண்ட
அன்றைய பதிலைப்போல இல்லை
உள் எழும் கேள்விகளுக்கு
பதில்கள்...

எனக்குப் பிறகான 
உன் அடையாளங்கள் 
எதுவென அணிவகுத்த பின், 
உருவாக்கிய மெளனத்தில் 
முப்பது மில்லிக் கனவுகளும் 
இரண்டு துண்டு புன்னகையும்
குளிரூட்டப்பட்ட அறையும்
தூண்டப்படாத காமும்
புரண்டு படுக்கும் நோய்மையும்
போதும் இல்லையா உனக்கு?

பாதப் பள்ளத்தில் நழுவிய
மீன் குஞ்சுகளை
உனக்கும் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்
கனவென்று உடல் திருப்பாதே
இப்போதும் லிப்டில் கீழிறங்குவதற்கு
ஏழாவது எண்ணை அழுத்துவதாய்
காட்சி வருகிறது...  

How Much Do You Love Me?

Tuesday, August 18, 2015 | 0 comments »

வீடு வந்து பேயோட்டும் மூன்று சுருட்டை
கொத்தாய் பற்றிப் புகைக்கும் முனியென
எனக்கென்று தயாரித்து வைத்திருக்கும்
உன் பிரத்யேகக் கண்களை இப்போது அழை.
பக்கத்து வீட்டுக்காரி கவனிக்கச் சொன்ன
டேனிலியாவின் கருவிழி உள் உருள்வது
அனிச்சையாய் நினைவிற்கு வருகிறது
How Much Do You Love Me?

மணற் கடிகாரத்தில் கவிழும்
துகள்கள் கொண்டு
காலத்திற்கு மதில்கள் கட்டுகிறேன்
குவியல்களாக மேடேறும்
பொழுதுகள் மதில்களாக மறுப்பது
பனிக்கால காற்றில் உரைக்கிறது
சைரன் விளக்குகளில் மிஞ்சிய
நீல சிவப்பு நிறத்தை
குவியல்களெங்கும் பூசுகிறேன்
சாயங்கள் உதிரத் தொடங்குகையில்
விடியலை புறக்கணிக்கும்
திருநங்கையின் புறங்கால்களில்
நொடிகள் நிர்ணயிக்காத
சமிக்ஞை கிடைக்கிறது
பச்சை நிறத்தில்...

உடல் சூட்டினை
காதுமடல் உணரும் தருணத்தில்
தரையெங்கும் வியாபித்துக் கிடக்கிறேன்
முன்னெப்போதும் இல்லாத பாய்ச்சலோடு

சிப்பாயின் முதல் நகரலின் இடைவெளி
குதிரையின் வெட்டுதலுக்கான முனைப்பென
யூகத்தின் அடுக்குகளை நிலைகுலைக்கிறாய்
நீட்டியிருந்த கால்களை மடியில் கிடத்தி.

சாமர்த்தியங்களும் காய் நகர்த்தல்களும்
எடுபடாமல் முதுகில் அழுந்திய-அந்த
பின் மதியத்திற்குப் பிறகு தான்
தோல்வியென ஒப்புக்கொள்ளச் சொன்னாய்

முன்னெப்போதும் இல்லாத எள்ளலோடு

பின்னங்கால் இரண்டிலும்
சக்கரம் ஏறி நடமாடும்
நாய் ஒன்றின் புகைப்படம்
இணையத்தில் கண்டது
நினைவில் வருகிறது

முந்தைய இரவு வாட்ப்பில்
விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக
நாய்களின் இரண்டு காணொளிகள்
பார்த்ததும் காரணமாய் இருக்கலாம்

நேற்றைய நினைவிலிருந்தும்
நாளைய கனவிலிருந்தும்
மரித்துப்போவேன்

உருட்டும் சோழியிலொன்று
தொப்புளில் மலரும் நாளில்

அதுவரை
குரலற்ற இந்தக் காதுகளையறுத்து
பத்திரப்படுத்த
குளிர் மிகுந்த தேகம் ஒன்றை
தேடிக்கொண்டிருக்கிறேன்

...................

Monday, June 08, 2015 | 0 comments »

வெகு தொலைவிற்குப் பிறகு
தோளுக்கு எத்துப் போடும் நாயை
மண்டியிட்டு அனுமதிக்கிறேன்
நக்கித் தீர்க்கும் அதன்
சொரசொரப்பு நாவை
பகல் கூட்டி வந்த
கருமேகத்தின் அணலை
மழைக்குமுன் ஒதுங்கும் பருவத்தின்
பாதத்தில் வரைகிறேன்
கண்ணுக்கெட்டும் தூரம்வரை...


தடங்களற்றப் பாதையில்
பயணிப்பதன் சாதுர்யமாய்
கருவேறிய உடல் பற்றி
புணரும் உன் சிந்தனை
ஊடாடுகிறது
கூடுதல் நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறாய்
பப்பாளிப் பழம் திகட்டிய கதை
சொல்வதற்கென காதுகள் இல்லை...

தவளையின் தாவலென
முன்னதுக்கும் இன்னதுக்குமான
இடைவெளி
கிளர்ந்தெழும் நரம்புகளின்
பசியென தீனியிடுகிறாய்
வெளவாலின் கருங் குருதியை
நினைவுபடுத்துகிறது-உன்
வேட்கைக்கு உண்ணக்கொடுக்கும் உடல்

மங்கிய ஒளியில்
குளியலறை வாசலில் நின்று-நீ
சிந்தும் புன்னகையைத் தான்
துடைத்தெறிந்து கொண்டிருக்கிறேன்
இந்நாளில்

தலைப்பில் எழுத்துப்பிழை இல்லை
நீங்கள் பொதுவாய் குறை சொல்வதற்கென
முன் வைக்கும் நான் போல
புறந்தள்ளுவதற்கில்லை
இந்த என்

இந்த என்
எண்களின் ஊடு விளையாட்டு
சுய புலம்பலின் ஓற்றையடிப்பாதை
பதில்கள் வேண்டாமென
ஒருமனதாய் தீர்மானித்து
காத்திருக்கும் கள்ள மனம்

அது
ஒருவித விடுபடுதலுக்கான
காப்பாற்ற முடியாத ரகசியம்

அடித்துச் சாத்திய
சன்னலின் இடுக்கிலிருந்து
சுவரோவியம்
வரைந்துகொண்டிருந்த மழையை
கலைந்த கனவின் ஏதோவொரு
முடிச்சின் தொடர்ச்சியென
திறவா கண்கொண்டு பார்க்கிறாய்
தானாகவே முன்வரும்
நிறமற்ற முலைகளை நிஜமென
கவ்வ எத்தனிக்கையில்
தூக்கத்தில் ஊறிய எச்சில் ஒழுகுகிறது.
யார் மீதும் புகார்களற்ற அந்தக் கனவில்
பாலின சந்தேகம தூங்குவதாயில்லை 

துரு

Monday, May 04, 2015 | 0 comments »

பிணையம் வைத்து மீட்டெடுக்கும்
மெளனங்களை
சூடேறிய ஆடையகற்றி
பதற்றத்தோடு தொட்டுப் பார்க்கிறாய்
உன் ரசனைகளின் கூறுகளென-நீ
தேர்ந்தெடுத்த  தனித்தக் காட்டில்
மரங்கொத்தியின் துளையோசை
ஈரமறிந்து இறங்குகிறது
உன்னைப்போல் அல்லாது...

   

உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

நான் உன்னவிட ஒரு ஸ்டெப் மேல என்று என் தோள் அழுத்திய படியே கோயில் வாசலில் உன் பின்னங்காலை இறுக்கியிருந்த லெதர் செருப்பை விடுவித்துக் கொண்டிருந்தாய். உன் காலில் இருந்து செருப்பு நழுவும் நொடிகளை கச்சிதமாய் விரல்களால் பாதத்தில் கோடு கிழித்திருந்தேன். நீ கலைந்து ஓடும் மான் போல சட்டென படிகளேறி கோயில் வாசலை அடைந்திருந்தாய்.

ஒவ்வொரு படிக்கட்டுகளாய் மேலேற மேலேற கோயில் கருவறை பார்த்து நின்றபடி பக்கவாட்டில் கண்ணை உருட்டிக் கொண்டிருந்தாய் நான் சிரிக்கவும் தலையை நேராக்கிக் கொண்டாய். எனக்கும் இப்படி நடந்து கொள்வது தான் பிடித்திருந்தது. கோயிலில் வைத்து விழும் திட்டுக்களில் தான் எத்தனை காதல்.

அதில் ஒரு அமைதியை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது
அதில் ஒரு மென்மையை கடைபிடிக்க வேண்டியிருக்கிறது
அதில் ஒரு கெஞ்சலை கூடவே வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
அதில் ஒரு செல்லப் பாசாங்கோடு துரத்த வேண்டியிருக்கிறது
அதில் ஒரு தாவலை தவிர்க்க வேண்டியிருக்கிறது
அதில் தெத்துப்படும் காமத்தை ஒளித்துவைக்க வேண்டிருக்கிறது

உன் சம்பிரதாயங்கள் முடிவில் தூண் அருகில் என் தொடைக்கு மேல் உன் மூட்டு அழுந்த அமர்ந்து கொண்டு வெகுநேரமாய் குங்குமத்தை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாய். உன் ரேகை மடிப்புகளில் ஊறிய குங்குமச் சிவப்பை விரலில் ஏந்தி நெற்றி தொடுகையில் எப்படித்தான் முத்தமிடுவாயோ? உள்ளங்கைக்கு கொஞ்சம் கீழ் உதட்டால் ஒத்தடமிடுவிடுவாய்.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?

அன்று நீ ஏனோ கடவுளை கும்பிட மறுத்திருந்தாய். நாம் எப்போதும் அமரும் அதே தூணில் வைத்துத் தான் உன் வகிட்டில் குங்குமம் வைத்துவிடச் சொன்னாய். கைப்பை ஏன் இத்தனை பெரிதாய்? இத்தனை கனமாய்? என்றதுக்கு மனமும் தான் என்று முனுமுனுத்தாய். திருமணப் பத்திரிக்கையையும் நீட்டியிருந்தாய்.

பிறகு என் அலைபேசியை எடுத்து மெயில் மீ அவர் ஆல் போட்டாஸ் என்று உன் பெயருயும் என் பெயரும் சேர்ந்தது போன்ற மெயில் ஐடியும் கொடுத்தாய்.

எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நீ மறுக்க மறுக்க நான் பிடிவாதமாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. உன் மனதிற்கு ஒருவேளை அந்த பதில் தேவைப்படலாமென்று தான் அன்று பதில் சொல்ல வேண்டியதாயிற்று. எப்படியும் உன் கோபம் தணியும் என்ற நம்பிக்கை தான். தூங்கி எழுகையில் ஒரு தெளிவு இருக்குமே அப்போது அந்த பதிலை உணர்வாய் என்ற நம்பிக்கையில் தான் அந்த பதிலை சொல்ல வேண்டியதாயிற்று. 

எனக்கு அப்படித் தோன்றியது என்பது எனக்குள் இருந்து வெளிவந்தது ஒன்றுமில்லை. நீ கொஞ்சம் கொஞ்சமாய் உன்னை எனக்கு இது தான் நீ என வெளிக்காட்டிய பிம்பத்திலிருந்து முளைத்த மல்லிக்கொடி போன்று தரை படர்ந்து கிடக்கிறது. அங்கிருந்து தான் மீண்டும் மீண்டும் தரை படர்ந்து பக்கக்கண் இட்டு முளைக்கிறேன்.

நீ ஒவ்வொரு முறையும் பதில்களை நிராகரிப்பதும் பின் அதற்கு வருந்துவதும் அதற்கான கால இடைவெளி மட்டும் மாறிக்கொண்டு வருகிறதே தவிர, பதில்களற்ற சண்டையல்ல. எனக்கு எதையாவது நினைவூட்டவேண்டும் போலிருக்கிறது. எதையாவது என்றால் எதையாவது ஓர் நள்ளிரவில், விடிகாலையில், “எத்தன தடவ சொல்லிருக்கேன் டேட்டா ஆப் பண்ணிட்டு தூங்குனு” எதையாவது தோன்றியதை எனக்கு அனுப்பிவிட்டு அது டபுள் டிக் ஆகும் பட்சத்தில் நான் விழித்துவிடுவேனோ என்று மறுநாள் நீ திட்டித் தீர்க்கும் கொஞ்சல்கள் போன்று எனக்கும் எதையாவது நினைத்துப்பார்க்க, கொஞ்சம் சிரித்துக்கொள்ள உடல் தேடா காமம் கொள்ள, இன்னும் சொல்லத் தெரியா என்னென்னவோ.

இடைவேளைக்குக் கூட எழுந்து செல்லாமல் இருக்கையிலேயே இருந்துவிட்டு படம் முடிந்து எரியும் அந்த மெல்லிய வெளிச்சத்தில் இருக்கையிலிருந்து கொஞ்சம் முன் நகர்ந்து உடலோடு ஒட்டிக்கொண்ட உன் உள்ளாடையின் பிடிப்பை தளர்த்தி விட்டது என்னை சில்லிட வைக்கிறது.

சில்லிட என்றால் சூடு தணிந்து இதமாய் கிளம்பும் நீராவி போல இதமாய் சில்லிடலாய்.

பென்சில் கொண்டு எப்படி உள்ளங்கையில் எழுத முடியும்? உனக்கொரு நிழல் படர்ந்த இருக்கை கிடைத்துவிடக்கூடாது கூர்மையாய் முனை நகர்வதை கவனித்தாலும் பிடிபடாதபடிக்கு எதையோ எழுதி எதையோ வரைந்து சிரிக்கும் சிரிப்பை இழை அருந்த என் அரை பல்பில் நுழைத்து ஓட்டிவிடலாமென்று பார்க்கிறேன்.

“நான் வேணா தூக்கட்டுமா” என்று கேட்டது, அந்த குரல் சன்னல் திறந்திருந்தும் வெளியேற மறுக்கிறது.

முத்தம்

Saturday, March 21, 2015 | 0 comments »

எனக்கு பயமாய் இருக்கிறது. திரும்புவதற்குள் பெற்றுவிடத் துடிக்கும் அந்த முத்தத்தை அறையிலிருந்து சுமந்து வருகிறேன் நீ என்னிடமிருந்து பெற்றுவிடாதபடிக்கு. பிடிவாதம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. உனக்கு ஒரு விளையாட்டு அப்படித்தான் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறாய். உன் சொற்களின் ஊடு விளையாட்டை என்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அங்கு தான் தவறி(ற)விடுகிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். 

ஒரு முறையேனும் எனை அனுமதிப்பாய் என்றுதான் நம்பி வருகிறேன். எப்படி நான் ஜெயித்துக் கொள்கிறேன் என்று உன்னிடமே வேண்டுவது. சொற்களின் ஊடு விளையாட்டில் நீ போடும் கொக்கியில் நேரிடையாகவே மீனாகித் தொலைகிறேன். புழுவாய் உருக்கொண்டு உணவாகிறது முத்தம். இத்தனையும் பேசிவிட்டு, முற்றிலுமாய் நிராகரித்துவிடவா முடியும்?

நீயும் அப்படியே தான் கேட்டும் தொலைப்பாய். என்னமோ வேண்டாத மாதிரி ஹ்ம்ம்” உன் புருவம் உயர்த்துதலை வெறுமனே புருவம் உயர்த்துதலென்று ஒருபோதும் சொல்லிவிடமுடியாதொரு தருணத்தில் தான் இந்த சில்லறை சேட்டையை தொடங்கி வைப்பாய்.

அது ஒரு விடுபடல்
அது ஒரு அழைப்பு
அது ஒரு வேண்டுதல்
அது ஒரு அனுமதி

என் பிடியில் இல்லாமல் நழுவி வேடிக்கை பார்த்தலின் சுகம் என்னைப் போலவே உனக்கும் தெரியுமென்பதால் சுகத்தின் ஊடாகவே தொடரும் அவஸ்தையை நான் சீண்டிப்பார்க்க விரும்பவில்லை. அது தோல்வியன்று தோல்வியின் வெற்றி. இருவருமே தோற்பதற்கு தயாராக இருக்கும் களம் அப்படி. போ ஹேட் யூ.

எனக்கு மறுபடியும் பயமாய் இருக்கிறது. முத்தத்தை கொடுத்து விடுவேனோ என்று. உன் செய்கைகள் என் கண்ணாடி முன் நின்றாடும் போதேல்லாம் அதட்டி வென்று விடுவேன்.

இனி உனக்கொரு மாஸ்க் மாட்டிவிடலாம் என்றிருக்கிறேன். அப்படியும் ஒரு பயம் துரத்திக்கொண்டே வருகிறது பாரேன். நீ ஒரு மாதிரி தலை சாய்த்து குரல் மாற்றி குழைவாயே. என் கையை நானே பின் கட்டிக்கொள்ள வேண்டும்.

போ... அதுவும் முடியாது. நான் நெட்டி முறிக்கையில் நீ பார்த்தது.

கெட் லாஸ்ட் பரம் மை தாட்ஸ்

ப்ளீஸ் கிஸ் மீ.

உனக்கு, மேகம் கலைந்து பளிச்சிட்ட நிலா காட்டியவது போல எளிதல்ல நீ பரிசளித்த வடுக்களை காட்டுவது. இன்னும் ஓர் இரவை உன்னிடமிருந்து தான் கடன் எடுக்க விரும்புகிறேன். எனக்கான இரவென்றாலும் நீ தின்று கொழுத்த இரவு அது. நீ என்பதைவிட நாம என்று சொல்லிக்கொள்வதில் எந்த தயக்கமும் வெட்கமும் இல்லைதான். இருப்பினும். இந்த காலகட்டங்கள் நான் அனுமதிக்காத இரவு. நான் விரும்பாத இரவு..

மயானங்கள் சூடிக்கொள்ளும் அமைதி போன்றதொரு உதட்டை நீ சமீபமாய் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறாய். பிடித்த பாடலை முனுமுனுக்க மறுக்கும் உதடுகள் அது. உன்னைப்போல கைமீறி போய்விட்டதாய் எப்படி உடலோடு ஒட்டிக்கொண்ட உதட்டை விடுத்து இருப்பது.

முனை மழுங்கிய பற்கள் நிறைந்த வாள் ஒன்றின் துணை கொண்டு அறுத்து விடலாமென்றிருக்கிறது. உன் உடல் கண்டு பழக்கப்பட்ட கண்ணாடி அதையும் அபகரித்து கொல்கிறது. தசை கிழிய குருதி வழியும் உன் நினைவினை வெறுமனே எப்படி அறுத்தெறிவது?

வழியனுப்ப கை காட்டுவதை ஒவ்வொரு விரலாய் மடக்கி நிமிரத்தும் நொடிகளின் இடைவெளி மயிலிறகென வருடுகிறது மூடிய விழிகளுக்குள். இந்த வருடலை வருடலென கடந்துவிட முடியுமென்று நம்புகிறாயா? உனக்கு ஒருபோதும் சொல்லப்படாத, வேண்டாமென நிராகரித்த விழுங்களின் எண்ணிக்கை தெரியுமா? அது சம்பிரதயாமில்லை தவிர்த்தல் என்பது விழுங்கல்களின் மூலமாவது அறிந்து கொண்டிருந்தாயா? அறிந்தும் தவிர்த்திருந்தாயா?

வெகு நீண்ட உரையாடலின் நா சுவைக்காத உலர் உதடு கொண்டு உதடுகள் பிரிக்காமல் உதட்டிலிட்ட முத்தத்தின், ஈரம் இப்போது எங்கு சுரக்கிறது தெரியுமா உனக்கு?

முத்தமிடு
முத்தமிடு
முத்தமிடு
நீ
குறுக்கு வெட்டாக
சிலுவையின் வடிவில்
சுவைத்த இதழில்
முத்தமிட்டதைப்போல
முத்தமிடு...

ஒரேயொருமுறை ஒரேயொருமுறை

மெல்ல உயிர் அறுக்கத் தொடங்கியிருக்கும் இந்தப் பொழுதுக்கு நினைவுகள் என்று பெயரிடச் சொல்லியிருக்கிறாய் நீ. எப்போதெனில் மிச்சமுள்ள வாழ்கையை உன்னை நினைத்தே கடத்தி விடுவேன் என்று நீ பொய் சொன்ன பகலிரவில் தான். கண்ணைக் கட்டிக்கொண்டு வருகிறது என்பதற்கான அர்த்தம் அன்றைக்குத்தான் புரிந்தது. அல்லது புரியும்படியான ஒரு விஷயத்தை நரம்பு தட்டித் தட்டி எடுத்து இன்ஜெக்ட் செய்தாய்.

ஒரு வகைத் திணித்தல் தான். வேறு எப்படி பெயரிட? அவசரகால முத்தம் போல ஓர் பேரிடர் எப்போதும் நிகழ்ந்து விடாதபடிக்கு நீ எப்போதும் செய்தது கண்டு திணறியிருக்கிறேன். பின் அனுபவித்து அனுமதித்திருக்கிறேன். உன் மழைக்கால ஆடை நிறங்களுக்கும் கோடைக்கால ஆடை நிறங்களுக்கும் நீ வகைப்படுத்தி வைத்திருக்கும் காரணங்கள் அதற்கு நீ சொல்லும் விளக்கங்கள் என்பதைவிட, நீ உண்டு பண்ணும் செய்கைகள் அனுமதிக்கும் படியாகவே இருந்திருக்கிறது.

சமரசமின்றி காத்திருக்கும் சந்திப்பின் இடைவெளியில் நீ கலந்து வைத்திருக்கும் கோபத்திற்கும் தவிப்பிற்கும் ஒருபோதும் பெயரிடாதபடிக்கு சூடிக்கொள்ளும் மெளனம், அதன் வாசனை, அதன் ஆயுள், அவரவர் அறைக்குத் திரும்பியதும் நீ கொணரும் மூச்சுக்காற்றின் ஏற்ற இறக்கம் கொண்டு பரிமாறிவிடுவாய் போதுமான அளவிற்கு.

அழுது அரற்றுவதில் உடன்பாடில்லாத ஓர் விசித்திரமான ஜீவன் என, காட்டித் தோற்றத்தில் எந்த குற்ற உணர்ச்சியும், எந்த கேலியும், எந்த ஆறுதலும் கிட்டிவிடப் போவதில்லை தான். இருந்தும் சத்தியங்கள் குறித்தும், வாக்குறுதிகள் குறித்தும் நியாபப்படுத்துதல், சொல்லிக்காட்டுதல் திரும்பதலுக்கான சமிக்கையற்று நாட்களாகிவிட்டது.

சுமத்தலின் பாரம் என்ன என்பதை உன்னுடல் சுமக்காமலே உன்னுடல் சுமக்கும் இந்த பைத்தியக்கார பசிக்கு நீ நினைவுகள் என்றும், நான், நான்
சொல்லத்தெரியவில்லை.

சிந்தனையில் முகாமிட்டிருக்கும், பனிகடந்து வெயில் கூடும் இந்த கால வெளியில் அயர்ந்து தூங்க காமம் ஓர் மருந்தாகிப் போனது பெரும் துயரம் தான்.

விழிப்புத் தட்டுவது பின்னிரவிற்கு பின் என்பதாலோ என்னவோ என்னை மீண்டும் மீண்டும் அந்த நிறம் அச்சுறுத்துவதாகவே இருக்கிறது. நிறம் என்று எப்படிச்சொல்ல அந்த நிறத்திலான ஆடை..

பயத்தின் உச்சநிலையாய் ஆடையை ஓர் பைக்குள் கண்ணில் பட்டுவிடாதவாறு பத்திரப்படுத்தியாயிற்று. கண்ணில் படாதபடி தொலைக்கலாம் தீயிடலாம் தான். கேட்பதற்கான நீயுமில்லை.

இப்படி வாயில் எச்சில் ஒழுக எழுந்து கனவில் யாரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பது மட்டும் நினைவிற்கு திரும்பவேயில்லை.

என்னால அந்த மொத ந்யூடிட்டிய மறக்க முடியல.

நீ சொல்லிச் சென்ற அந்தச்சொல் காமத்தின் மிகுதியில் இறுகும் ஆடைப்போல் சித்திரவதையாய் இருக்கிறது.

There is no past tense in love. Fill the emptiness

அடுத்து அடுத்து. என சுற்றிக் கொண்டே வரும் பண்பலை வரிசையில்  எந்தப் பாடலில் நீ நிறுத்துவாய், விரும்புவாய் என நான் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறேன். அதிக நேரம் வரிகளில் நின்றிருக்கிறாய். அந்த வரிகளை மிக மெல்லிய குரலில் சொல்லி சிலாகித்திருக்கிறாய். பேச முடியாத சூழலில் குறுஞ்செய்தி உரையாடலில் நடுவே ஏதோ ஒரு பாடலின் வரியைச சொல்லி, பின் அந்தப் பாடலை என் லேப்-டாப்பில் இருக்கிறதா என்று தேட விட்டிருக்கிறாய். இதையெல்லாம் நீ வேலை சென்று திரும்பிய அந்தியில் சொன்ன நாளில் வீடு திரும்பி பதில் அளித்ததை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

இத்தனைக் காதலையும், இத்தனை நினைவுகளையும் சுமந்து கொண்டு பறக்கும் உன்னால் இரண்டு மாடியும் லிப்டில் செல்லாமல் படி வழியாக என்னைத் தூக்கிச்செல்ல முடியுமா? இது தான் சிக்னலில் வைத்து நீ கேட்டக் கேள்வி

சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் இங்கிருந்து நான் நடக்கிறேன் ஆனால் நான் திகட்டாத அளவிற்கு, நான் ஓடியாமல் மடியும் அளவிற்கு நீ காதல் செய்ய வேண்டுமென்று முதல் மாடியின் திருப்பத்தில் வைத்து சொன்ன கேள்வி.

அது. உன் காதல் விளையாட்டு மாதத்தில் இருமுறையாவது இப்படி ரசனை மிகுந்ததாய் அமைந்து விடும். நீ எங்கு கொண்டு நிறுத்துவாய் உன் ஆளுமை என்னவாக இருக்குமென்று தெரிந்தும் தோற்கும் அந்தப் பேரானந்தம் நீ கற்றுக் கொடுத்தது தான்.

வெள்ளரிப் பிஞ்சுகள் கழுவி முன் பல்லால் ஒடிக்கையில் வளையும் உந்தன் உதட்டில் சீசா ஆட உதட்டை நெருங்குகையில் நொறுங்கிய கன்னாடிச் சில்லுகளை, அங்கிருந்தே அப்படியே அசைய விடாமல் டீ-ஷர்ட் கழற்றி நனைத்து ஒற்றியெடுத்த ஞாயிறு மதியம் இப்போதும் வைக்கிறது.
பொட்டல் காட்டில் தூரத்தில் மிதக்கும் கானல் நீரென.

நிர்வாணம் காமத்திலிருந்து தப்பி காதலுக்கு வாக்கப்பட்டது அன்றைய மதியத்திலிருந்து தான்.


தேதிகள் ஞாபகத்தில் இருப்பதைவிட வேறெதுவும் இந்த நிகழ்காலத்தில் கொடூரமாய் இருந்துவிடப்போவதில்லை என்பதை தீர்க்கமாய் நம்புகிறேன். அலுவலகத்தில் யாரேனும் தேதி கேட்டு விட்டால் மொத்தமாய் சிதைகிறேன். பகல் இரவு என மாறிமாறி வருவது மிகுந்த அச்சுறுத்தலாய் இருக்கிறது. மழு இரவோ முழு பகலோ வாய்க்கும் ஓர் நாளில் பயணத்தைத் தொடங்க வேண்டும் நீ காட்டிய திசையின் எதிர் தசை நோக்கி.

தெருவில் எங்கோ எப்போதோ ஒருமுறை கண்ட பைத்தியத்தின் தளர்ந்த ஆடையும் அதன் நிறமும், அதன் முக பாவனையும், சாலை அளக்கும் நடையும், கலைந்த கூந்தலும், நீள் நகங்களும், இருள் அப்பிக் கிடக்கும் என் அறையில் எனக்கருகே படுத்திருக்கிறது. யாவும் நீ தான், உன் வினை தான், உன் விளையாட்டு தான், உன் பொழுதுபோக்கு தான். ஆனால் இப்படியெல்லாம் உன்னை கை காட்டிவிட முடியாது. தெரியும் தானே?

மின் விசிறியின் அதிர்வில் படுகிடையாக எனக்கருகே ஆடிக்கொண்டிருக்கும் நூலாம்படை உன்னை இன்னும் இன்னும் நெருக்கமாக கிடத்துகிறது. அல்லது உன்போல் மடியில் அமர்ந்து கொள்கிறது. பயமாய் இருக்கிறது என்றால் நம்புவாயா? பயம் தான் உன் மேல் அல்ல என்மேல். இதை துன்புறுத்துதல் என்று மேலும் மேலும் குற்றம் சாட்ட மனது விடாது மறுக்கிறது. ஒருவகை துன்புறுத்தல் தான். அது உனக்கானதோ உன்னாலானதோ இல்லை என்பதை உனக்கு மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன். அது எதற்குள்ளும் அடங்காதொரு பசி.

இந்த விழிகள் ஏன் மூட மறுக்கிறது என, சதா கேட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்குள். இந்த இருள் பிடித்திருக்கிறது. இந்த இருள் நீ அறிமுகப்படுத்தியது. உனக்கும் எனக்குமான போர்வைக்குள் பிறந்த இருள் இது. புலம்பலென நிராகரித்துவிடுவாய் தெரியும். இருந்தும் உள்ளூருவதை அப்படியே முன் வைப்பது உனக்கு புலம்பல் எனக்கு விடுபடல். அல்லது மீண்டும் சிறை. இருந்துவிட்டுப் போகட்டும்.

விரும்பி வாங்கிய கீறல்களும் தழும்புகளும் என்னென்னவோ தூண்டுகிறது.

உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க நினைப்பது எவ்வளவு அபத்தம். நீ என்னைப் போல எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டிருப்பாய் என்பது தான் ஒருவகையில் எனக்கான ஆறுதலும் கூட. என்றாவது ஒரு நாள் நிகழ்வதற்கு சாத்தியமானால் அழைப்பில் குரல் மறந்து யாரென கேட்கும் நாளன்று முடிவுக்கு வரலாம் யாவும். ஆமாம் யாவும் தான். அதற்குள் என்னவெல்லாம் பொதிந்து வைக்க? தெரியாது.

விட்டம முழுக்க அலைபேசியிலிருந்து படர்ந்து கிடந்த மங்கலான அந்த ஹாலோஜின் பல்பு போல மிளிரும் வெள்ளை ஒளி, நினைவுகளை கூசச் செய்கிறது. பக்கவாட்டில் திரும்பிப் படுக்கிறேன்.

சன்னல் கதவின் கீறல் வழியே உன் சீப்புக்குள் அகப்படும் கூந்தலின் அடர்த்தியளவுக்கு மஞ்சள் ஒளியை ஒழுக விடுகிறது. அது தன் வாடிக்கையாளனுக்காக ஆடையகற்றி மலர்ந்து கிடக்கும் பரத்தை என எல்லா இரவும் தவறாது காத்திருக்கிறது.

சன்னல் திரையின் மடிப்பை 
கூட்ஸ் இரயிலின் பெட்டியை 
எண்ணிய மனதோடு எண்ணுகிறேன் 

வாசல்நடை தப்பிய பிடிவாதத்தின்
ஆயுளும் முன் முடிவும்
காரி உமிழ்கிறது தனக்குத்தானே

போக்கிடமற்றவாறு பழக்கிய
பெல்ட் மாட்டிய அந்த நாய்
நன்றியோடு இருப்பதாய் சொல்கிறாய்

பற்களின் இடுக்குகளில்
சிக்கிய துணுக்கென உறுத்துகிறது
அச்சொல் வேறொன்றுமில்லை

பிறகு

Tuesday, February 24, 2015 | 0 comments »

நிழல்கள் கீழ் நிற்க விரும்பும் 
உன் பிரத்யேக கண்களை 
இரவிலும் கண்டதுண்டு 

மணிக்கூண்டிலிருந்து
மணிக்கொருமுறை ஒலிக்கும்
வசனத்தை கேட்க மெளனிக்கிறாய்

மெளனிக்க சொல்கிறாய்

சாக்லேட் தாள் கிழிக்க சொல்லிக்கொடுத்த
மதியம் தப்பிய மாலைக்குள்
நான்கில் மூன்று தும்மல்களை

கைக்குட்டைக்குள் சேகரித்தாய்
கடலில் வாழும் மீன்களென
இலக்கற்று பறக்கத்துவங்கியது

தெருவிளக்குகள் சூரியனாய்
தெரிந்ததோ என்னவோ
இருட்டியது குறித்து பேசவில்லை

துருத்திக்கொண்டிருந்த
பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த கைக்குட்டை
என் கொடியிலாடும் க்ளிப்பிற்குள் அகப்படவேயில்லை

Blogger Wordpress Gadgets