நான் நிதானத்திற்கு வந்துவிட்டதாய் நீ
சொல்லத் தொடங்கிய இரவில், மிகுந்த கும்மாளத்தோடு இருந்தோம். எக்காளமாய், மலைப் பிரதேசத்தில் நின்று சிரிப்பது போல எதிரொலி கேட்கிறதா என்று அறையில் கவனிக்க வைத்தாய். இருவரும் மேலும் கீழுமாய் உடலை
மாற்றிக் கொண்டிருந்தோம்.
மேலிருந்து களைய முயன்று முடியாமல் தோற்று, கண்களைப் பார்த்ததையும், பின்னொரு இரவில் சாதித்து விட்டவன்போல காட்டிக்கொண்ட பாவனையில், பொறுமையை கற்றுக் கொண்டதில் உன் வேகம் கூடியது தெரிந்தது. தெரிந்ததும் கூடியது.
கீழிருந்து தொடங்குவதன் சூட்சமம் நீ
சொல்லச் சொல்ல விரல்கள் மேலேறிக் கொண்டிருந்தது நெஞ்சாங்கூட்டில்.
மூங்கில் பச்சையினூடே அதன் கணு மிளிர்ந்தது
நினைவுக்கு வருகிறது. நீ அன்று சொல்லிவிட்ட, நான் எழுத முடியாதொன்று, பின்னங்கழுத்தில் வீம்புக்காக சிலிர்க்கிறது. ஆனால் நான் சொல்வது
அதுவல்ல.
இடையில் இறுக்கிக் கொண்டிருந்த ஆடையையை
நான்கு விரல் அளவிற்கு மடித்துக்காட்டினேன். அடுத்தடுத்து நின்றிருந்த மெல்லிய
தசைக் கோடுகளில் பட்டையாக கோடு கிழித்தாய். சுண்டு விரல் காற்றில் கூடவே
வந்துகொண்டிருந்தது.
தலைமுடி கலைத்து விளையாடிக் கொண்டிருந்த
விரல்கள் கற்றையாகப் பிடிக்கத்தொடங்கியது.
நிலவு தரிசிக்கட்டுமென, நிலவோடு தரிசிக்கவேண்டுமென அகல விரிந்தக் கண்களோடு, மிதந்த நீண்ட கனவில் இடம் எதுவென தொலைந்து போயிருந்தது. டைரிதான்
என்றாலும், எப்போதோ நீ குளிர் காயப்போவதற்கு எழுதி வைக்க வேண்டுமா என்ன?
கண்களைத்
திறக்கவே விடவில்லை என்ற கர்வமும், திறக்க முடியவில்லை என்ற எள்ளலுமாய், தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருந்தாய்.
எது பகல் எது இரவென்ற குழப்பத்தின் நீட்சி பள்ளத்தாக்கில் புரள்வது போல வேகமாய்
எழுகிறது.
உழுதபின் விழுந்த தூரலில், மண் மடிந்து கிடந்த கரிசல் தரை அது. என் கண்ணுக்குத் தட்டுப்படாத, என் பாதத்தடம் மிதித்து துரத்தி வந்த நீ
மயிலிறகு ஒன்றைக்காட்டி என்னை நிறுத்தினாய். உன் வாசனையில் எட்டாததா ஐஸ் க்யூப், சாக்லேட், மயிலிறகில் கிடைத்துவிடப் போகிறது என்றேன்.
இது திருப்திக்கு அல்ல ஆசைக்கு என்றாய்.
கனவு கலைந்தது போலத்தான் இருக்கிறது. இமைப்
பீலிகை பிரிந்தபாடில்லை. ஆடையோடுதான் தூங்கியிருக்கிறேன் என்பதை, போர்வை உரசலில் உறுதி
செய்துகொள்ளும் அவகாசம் வரைக்கும்தான் தூக்கம் கலைந்தது என்று நினைக்கிறேன்.
புரள்வது தெரிகிறது. ஒருவர் மட்டுமே தூங்கியெழும் கட்டிலில், உன்னைத்
துழாவியிருக்கக் கூடும். தோளில் இருந்து கை வெட்டென தரை தொடாமல் விழுந்தது.
பிடிவாதமாய் இப்போது கனவை எனக்கு
விருப்பமான இடத்திற்கு நகர்த்துகிறேன். இந்தக் கரிசல் நிலம் எல்லாம் நீ விதைத்தது.
அக்குள் மிகவும் சூடாக இருந்தது. இடப்பக்கத் தோளோடு காது மூடி
ஒதுங்கிக் கிடக்கும் கூந்தலை முதுகிற்கு மாற்றினேன். மெத்தையோடு உடலும் அமிழ்வது
ஏனோ, உன் முதுகில் என்னைக் கிடத்தியதாய் பிம்பம் எழுகிறது.
வலப் பக்கம்தான் வாகு என
படுத்திருக்கிறாய். நான் கேட்டும் பிடிவாதமாய் மறுத்துவிட்டாய். பின்னங்கழுத்துக்குக்
கீழே, தாடை வைத்து
அழுத்துகிறேன். இப்போது நீ கேட்டு நான் அடம் பிடிக்கிறேன். உடலசைத்து உடலசைத்து
இருவர் தலையையும் ஒன்றாக்குகிறாய்.
கம்மல் அழுந்தி வலிக்கிறதென உடல் வலு
இழக்கிறேன். திரும்பிக் கொள்கிறாய். மூன்று நாள் தாடியென உன்னிடமிருந்து எழ
முயன்றுத் தோற்கிறேன்.
பாதத்தில் ரேகைகள் தேடுகிறாய். அல்லது ரேகைகள் வரைகிறாய். வலது தோளில் கணுக்கால் அழுந்தியிருக்கிறது. எடை சுமப்பது வலிக்குமென கால் வெட்டி இழுக்க முனைகையில் எடையின்
வீரியம் குறித்து பேசத் தொடங்குகிறாய். பாதம் உன் கண்களில் படவில்லை. உனக்கு முன்பாக நீ நாற்காலி போட்டு நிறுத்தி வைத்த கண்ணாடியில்
காண்கிறாய்.
மெகந்தி வரைவதற்கு உள்ளங்கையை விட உன்
பாதம் சற்று வெண்மை கூடுதலாக இருப்பதாக கேலி செய்கிறாய். எப்படியென்ற புருவ அசைப்பில் தரையில் படுக்க வைத்து காலுயர்த்தி
இருக்கையில் அமர்ந்து மெகந்தி வரைவது பற்றி சிலாகிக்கிறாய்.
நீ வார்த்தையில் கொஞ்சுவதைத்
தாங்கிக்கொள்ளும் மனது, அதுவே நீ செய்கைகளால் ஆளும் பொழுது உருகும் மெழுகு சில்லென மேனியில்
விழுந்து, பின் வெதுவெதுப்படைவது போலிருக்கிறது.
மேய்ச்சல் நிலத்தை வேடிக்கைப் பார்ப்பவன்
போல உன் மூர்க்கத்தனத்தை, விழி மூடியும், நாசி துடித்தும், உதடு உலர்ந்தும், அடி நாவில் எச்சில் ஊறியும், ஒரு டால்பின் போல மேலெழும்பி அடங்குகிறேன். அடக்குகிறாய்.
கன்னத்தில் முத்தமிடாதே கூச்சமாக இருக்கிறது.