Pin It

Widgets

உங்களுக்குத் தெரியாது
அவள்
திரும்பி வரப்போவதில்லை

இதயம் கனத்த இரவில் எதையோ
காற்றில் வரையத் துவங்கிவிடுகின்றன
எனையறியாது எனது கைகள்

அதன் கிறுக்கல்கள்-அவள்
முகமாகவோ பெயராகவோ
இருக்க வேண்டுமென முயற்சிக்காமலேயே

முகிலினங்கள் தனையறியாது
வரைந்து செல்லும் ஓவியம் போல
அதுவும் அவளாகவே ஆகிப்போகிறது

அறை முழுவதும் நிறைந்து கிடக்கும்
அவள் முகங்களை
தொட்டுவிட எத்தனிக்கிறேன்

சிறுமி ஒருத்தி உடைக்க ஓடும்
நீர்க்குமிழ்களை போல
ஏமாந்து தத்தளிக்கிறேன்

திசை தோன்றி திசை மறையும்
நிலவின் நீளத்தை ஆமை வேகத்தில்,
நத்தைச் சுமையோடு கடக்கும் இவ்விரவில்

உங்களிடம் எனது கன்னங்களில்
படிந்து கிடக்கும் நீர் ரேகைகளை
புன்னகையிட்டு மறைத்துச் செல்கிறேன்

எனக்குத் தெரியும்
நீ
நினைவை விட்டு அகலுவதேயில்லை!


2 comments

  1. அனைவருக்கும் அன்பு  // May 4, 2012 at 9:08 AM  

    //முகிலினங்கள் தனையறியாது
    வரைந்து செல்லும் ஓவியம் போல
    அதுவும் அவளாகவே ஆகிப்போகிறது // என்னாச்சு ரமேஷ் பிரிவின் சோகம் அப்பட்டமாய் வெளிபடுகிறது ............ஆறுதல் தேடும் மனதிற்கு நீயே ஆறுதல்.........வரிகளின் வழியே வழிகிறது உன் காதல்

  2. Unknown // May 4, 2012 at 6:31 PM  

    ஹ்ம்ம்ம் ஒரு பிரிவின் சோகத்தை எழுத முற்பட்டேன் எழுதியும் விட்டேன். நிச்சயமாக என்னுடைய காதல் தோல்வி அல்ல... தோல்வியுற காதலியும் இல்லை

Post a Comment

Blogger Wordpress Gadgets