Pin It

Widgets

எப்பொழுதும் நீ
எனக்காக விட்டுத்தரும்
சன்னலோர இருக்கையில்

காய்ந்த பருத்தி கம்பு
முந்தானை கிழித்துவிட்டதாய்
பனைமரத்தடியிலமர்ந்து சொல்லிக்கொண்டிருந்த
காட்சி படர்ந்து கிடக்கிறது

கஞ்சி வாளிக்குள் ஒவ்வொரு வெங்காயமாய்
உரித்து போட்டுவிட்டு-எனது
கால் பெருவிரலில் கசியும் குருதியில்
மணல் தெளித்து வைத்துக்கேட்டுக்கொண்டிருந்தாய்

அன்றும் சைக்கிளின் பின்னிருக்கையில்
உனக்குப் பதிலாய்
புல்கட்டினையே கிடத்திவிட்டு
பின்னர் வருவதாய் சொல்லியிருந்தாய்

உன் பாதம் அழுத்தி அழுத்தி
பிய்ந்திருந்த ஒற்றைக்கால் செருப்பினை
முருங்கை மரத்திலிருந்து அவிழ்த்து
வீட்டிற்குள் வைத்துவிட்டு

இவ்வருட தீபாவளிக்கும்
அழையாத உன் மகன் வீட்டிற்கு
சென்றுகொண்டிருக்கிறேன்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets