Pin It

Widgets

சன்னலின் திரைச்சீலை விலக்கி
வீதியில் விழுந்துகிடக்கும்
மின்சார ஒளியில் நீளும்

யாரோ இருவரின் கை கோர்த்த
நிழல்களும்
வெகுநேரமாய் காத்திருக்கும்
தனியொரு நிழலும்

வாகனங்கள் சத்தம் நின்றிருந்த
சாலையின் இருபக்கங்களிலும்
நடப்பதுமாய் நிற்பதுமாய் பிம்பங்கள்

தூரலுக்கோ மழைக்கோ அடிபோடும்
மேகக்கலவியும் காற்றசைவும்
கால்மேல் கால்போட்டு நீ புத்தகம் வாசிப்பதை

கன்னம் நனைத்தபடி
உருளும் மேற்சொன்னகாட்சிகளை
வேறெங்காவது கடத்திவிட எண்ணி

படிக்கட்டுகளில் வந்தமர்கிறேன்
பால்காரன் ஒருவன் கேட்டுச்செல்கிறான்
இனிமேல் நீங்கதான் பால் வாங்குவிங்களா?

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets