Pin It

Widgets



மொத்தமாய் நனையாது
ஒதுங்கி நின்று உள் வாங்கும்
சாரல் போல
பொழிந்துகொண்டிருக்கிறாள்

பொருத்தப்படாத விளக்கில்
திரியேற்ற காத்திருக்கும்
விழிகள் போல
பிரகாசமாய் ஒளிர்கிறாள்

படுக்கை எழாது தொடரும்
அலைபேசி உரையாடலின்
நீள் மூச்சுபோல
காதுமடல் பரவுகிறாள்

மிதியடியற்ற பாதம்போல
நிறம் கலந்து நிறம் பிரியாது
இரட்டை நிற ரோஜாபோல
காதல் காமம் ஏற்றுகிறாள்

பொட்டுவைக்க
கண்ணாடியில் குவியும்
விழிகள் போல
கண்கள் உற்று நோக்குகிறாள்

காற்றில் அலையும்
முகிலினங்கள் கூடுவதுபோல
தேகம் தொடுவதறியாது
முத்தமிட்டு விலகுகிறாள்

எழுதுவதற்கு எதுமற்று
உள்ளங்கையில் வரைந்துமுடித்த
நாற்சுவர்க்குள் குளித்த தேகத்தை
முத்தமிட பதறுகிறாள்

மொழிக்கு பசியாற
மெளனத்தை விழிவழியூட்ட
எம்மொழியிலும் அல்லாது
உளியிலும் நில்லாது

ஈரம் படர்ந்த மணலில்
நாணல் வளைத்து நாணம் நிமிர்த்து
காதல் எழுதுகையில்
அழகி பேரழகி ஆகிறாள்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets