Pin It

Widgets

"சரி சரி நேரமாச்சி"
என நான் நேரம் குறைத்து வைத்திருப்பது
அறிந்தும் என் கைக்கடிகாரம்
பார்ப்பாயே அடிக்கள்ளி
அது கவிதை!

"கேடி பையன்டா நீ"
என நீ அறியாது எடுத்த
ஸ்டிக்கர் பொட்டினை
காட்டியதும் சினுங்குவாயே
அது கவிதை!

"நீயும் வேணும்னா அடிச்சிக்கோ"
என கன்னம் காட்டி கண்னடிப்பாயே
அது கவிதை!

"இதுக்கு மட்டும் குறைச்சலில்லை"
என வாங்கிக்கொடுத்த
சாக்லேட் கடித்து
எனக்கும் கொடுப்பாயே
அது கவிதை!

"போ போ"
என பொய்யாய்
போகச்சொல்லி
என் நடவடிக்கை
கவனிப்பாயே
அது கவிதை!

"வெவெவெவெ"
என நான் மன்னிப்பு கேட்டதும்
சத்தமாய் சிரிப்பாயே
அது கவிதை!

"இப்ப மட்டும் கொஞ்சுவியே"
என கோபிக்கத் தெரியாமல்
திணறும் உன் விழிகளுக்குள்
பெருக்கெடுக்குமே ஆனந்தம்
அது கவிதை!

"பொய் சொல்லாதடா"
என ஒரு உண்மைக்கு
ஓராயிரம் கேள்வியும்
எதுவுமில்லையென
நீ எடுக்கும் பெருமூச்சும்
அது கவிதை!

"ஏன் நீ என்ன பண்ண போற"
என் கேட்கும் உன் மிரட்டல் தொனியில்
நீ காத்திருப்பதை
சொல்லாமல் சொல்லுவாயே
அது கவிதை!

"குட் நைட் சொன்னதும் தூங்கிடுவியா"
என காலையில் முதல் வேலையாய்
வம்பிழுத்து கொஞ்சலுக்கு ஏங்குவாயே
அது கவிதை!

அடிக்கடி உச்சரிக்கும்
உன் ஹ்ம்ம்களில்
நீ ஒளித்து வைத்திருப்பாயே
முத்தம்
அது கவிதை!

"போ நீ ஒன்னும் பேச வேணாம்"
என சொல்லி வரிசையாய்
அனுப்பும் வெற்றுக் குறுஞ்செய்தியில்
அரங்கேறும் உன் தவிப்பு
அது கவிதை!

"என் நீங்களா பேச மாட்டிங்களோ?
என சண்டைக்குப்பின் ஆரம்பிக்கும்
உன் பொறுமை உடைதலில்
தெறிக்கும் மென் காதல்
அது கவிதை!

"எப்ப பாரு இதே நெனைப்பு"
என போலியாய் கோபித்தும்
சீண்டலாய் புன்னகைத்தும்
பேச்சை மாற்றுவாயே
அது கவிதை!

"கடிச்சி வச்சிருவேன் போயிரு"
என்பது கட்டிப்பிடித்தலுக்கும்
அனிச்சையாய் நிகழும்
முத்தத்திற்கும் தானென
நீ காட்டிக்கொள்ளாதது
அது கவிதை!

சந்திக்க தீர்மானித்து
தாமதமாகும் வேளையிலெல்லாம்
"ஹ்ம்க்கும்" என முகம்
திருப்பிக்கொள்ளும் உன்னை
கெஞ்சலாய் கொஞ்சலாய்
மலர் கொய்வது போல்
உன் தாடை வருடி
சமாதானப்படுத்தும் வேளையில்
போதும் போதுமென
என் கை தட்டிவிட்டு
கோபமாய் புன்னகைப்பாயே
அது கவிதை!

"அழுதுட்டேன் தெரியுமா"
போ பேசாதே என தோள் சாய்ந்து
மெளனித்து இருப்பாயே
அது கவிதை!

"ஐயோடா ரொம்பத்தான்"
என நீ அலட்டிக்கொள்ளும்
அழகே
கவிதை தானடி!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets