Pin It

Widgets

ஒத்திகை-2

Monday, October 29, 2012 | 0 comments »

அன்றைய இரவு ஆட்டத்திற்கான
ஊரினை வந்தடைந்து கடவுளை வணங்கியதும்
ஒருமுறை மேடையை சரிபார்த்தல்


ஊர் தலைவன் விழா நடத்துபவன்
தன் குழுவை அழைத்து வந்தவன்
கோயிலின் சிறப்பு அறிந்துகொள்ளுதல்

கருஞ்சிவப்பில் உதட்டுச்சாயம்
எந்த நிலையிலும் அவிழாத வட்டக்கொண்டை
தற்காலிகமாய் மூடிக்கொள்ள ஒரு சால்வை

மஞ்சள் விளக்கின் சூட்டில்
கலைந்து போகாத முகச்சாயமும் பவுடருமும்
அவர் அவர் தலைக்கு தோதுவான கரகம்

தொப்புளுக்கு கீழே குட்டைப்பாவாடை
மார்பு தூக்கி நிறுத்தும் ரவிக்கை
இரத்தம் கட்டுமளவிற்கு சலங்கைகட்டு

சாராயமும் பணமும் தருவதாய்
இருபெண்களில் ஒருத்தியை ஊரிலொருவன்
இரவிற்கு விலை பேசுபவனை வழியனுப்புதல்

மனைவியாவோ அல்லது தங்கச்சியோ
தன்னோடு ஆடுபவளின்
உறவுமுறையை அவ்விரவிற்கு மரணிக்க செய்தல்

இறுதியாக
கரகாட்டத்திற்கான மேடையேறும் முன்
பூமி சுடும் பெண்களின் கடைசி சொட்டு மூத்திரம்!

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets