Pin It

Widgets

இருந்தும் இல்லாமலிருக்கும் 
வேளையில்
நிகழும் தேடலில் 
நீயெனக்கு மெளனத்திருவிழா

நுரை ததும்பத் ததும்ப
கடலைக் குடிக்கிறது
நான்கு கண்களின்
மூன்று பார்வை...

விரலிறங்கும் வரை
மணலில் ஆழம் பதிக்கும்
பின் மாலையில்
மஞ்சள் பூ விரிகிறது கடலிலும் கண்களிலும்

ஒரு கணிப்பில்
பாதத்தடம் தொடர்வது அறிந்து
எட்டுக்களை எட்டி வைக்கையில்
போதுமென கைசேர்கிறாய்
காதல் கடலில்

ஒரு பக்கம் நீ
மறுபக்கம் நான் என
கடிபடும் சோளத்தில்
நடுபக்கத்தில் மோதிக்கொள்கிறது
கன்னங்கள்

துணைக்கு சற்று கீழிறங்கியமர்ந்து
விரலிடுக்குகளின்
மணல் உதிர்த்து
கடலுக்கு செவிகொடுத்து
மொழிக்காக காத்திருப்பதும்
காதலே

உப்புக்காற்றின் பிசுபிசுப்பை
கைக்குட்டையிலும் துப்பட்டாவிலும் பதிந்து
இரவில் காட்சியோட்டுகிறது
காதல்

கிளம்பிவிடலாமென எத்தனித்து-பின்
நகரும் முட்களின்
வேகம் பொறுக்காமல்
கடிகாரம் மறப்பதும்
காதலே

கையை மட்டும் பிடித்துக் கொள்ள
அனுமதித்த மனது
திரும்புகையில்
தோளில் சாய்ந்து கொள்கிறது

காற்றிலாடும் திரைச் சீலையை ஒதுக்கிவிட்டு
நிலா ஒளியை முதுகில் கிடத்தி
துணையை ரசித்திருப்பதும்
காதலே

0 comments

Post a Comment

Blogger Wordpress Gadgets